தாலியைத் திருடி விட்டார்` !

bookmark

கணவன் இளவயதிலேயே இறந்துவிட்டான். அவனோடு வாழ்ந்த வாழ்வையும், இறப்பையும் எண்ணி மனைவி மருகுகிறாள். இச்சிறப்புக்கெல்லாம் காரணம் தனது தாலி என்று அவள் எண்ணினாள். தனது தாலி பாக்கியம் நீடித்து நிற்கும் என்று நம்பியிருந்தாள். ஆனால், பெருந்திருடர்களான எமதூதுவர்கள் அவளுடைய தாலியைத் திருடி விட்டார்கள். அது முதல் அவள் வாழ்விழந்தவளாக, உலக, இன்பத்திற்குத் தகுதியற்றவளாக ஆகிவிட்டாள். இந்நிலையை எண்ணி அவள் சொல்லுகிறாள்.

ஆச்சா மரமே
அறுபதடிக் கம்பமே
பட்டுக் கயிறே 
பனைமரத்துக் குஞ்சரமே
கண்ணே கண்மணியே
கல்கண்டு சர்க்கரையே
மெத்தக் களஞ்சியமே
விலைமதியா மாணிக்கமே
எண்ணெய்க் கறுப்பே
இரும்பான நெஞ்சகமே
செப்பேடு போட்டல்லவோ
சிங்க முகத் தூண் நிறுத்தி
எப்போதும் போல
எதிரே வரக் காண்ப தெப்போ
காந்த லைட்டுக்கு
கண்ணுச் சிமிட்டிக்கு
பம்பாய் ரோட்டுக்கு
பங்களா வீட்டுக்கு
வயிர மணித் தாலி வந்து
வாய்த்ததின்னு நானிருந்தேன்
ஆகாத மாதிருடன்
அது தடுக்க முடியாதே
வயிர மணித் தாலியை
வாரி விட்டேன் வீதியிலே

வட்டார வழக்கு: மாதிருடன்-எமதூதன்.

உதவியவர் : முத்துசாமி சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: சேலம் மாவட்டம்.
----------